பாகிஸ்தான் பெயர் இனி ”டெரரிஸ்தான்” : இந்தியா ஐநாவில் அதிரடி !
ஜெனிவா
பாகிஸ்தானின் பெயர் இனி டெரரிஸ்தான் என மாற்றிக் கொள்ளலாம் என ஐநா சபை கூட்டத்தில் இந்தியா கூறியது
ஐநா பொதுச் சபைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய பாக் பிரதமர் ஷாகித் அப்பாசி இந்தியா மீது சரமாரியாக குற்றச்சாட்டை அள்ளி வீசினார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாக தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்னையிலும் அவர் இந்தியாவை குற்றம் சாட்டினார்.
நேற்று இந்தியாவின் தூதர் ஈனம் கம்பீர் தனது உரையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர், “பாகிஸ்தான் ஒசாமாவுக்கும் முல்லா ஓமருக்கும் அடைக்கலம் கொடுத்துவிட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக சொல்வது நம்பும்படி இல்லை. உலக நாடுகள் அனத்திலுமே பாகிஸ்தான் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள நாடு என தெரியும். சுருக்கமாக சொன்னால் பாகிஸ்தான் இனி டெரரிஸ்தான் என பெயர் மாற்றிக் கொள்ளலாம். பயங்கரவாதிகளை அகில உலக அளவில் உற்பத்தி செய்து பல நாடுகளுக்கும் அனுப்பி வைப்பது பாகிஸ்தான் மட்டுமே.
காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக் உணரவேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பயன் படுத்துவதை பாக் நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளை சுதந்திரமாக நாட்டில் சுற்ற விடும் பாக் இந்தியாவின் மனித உரிமைகள் பற்றி பேசக்கூடாது. பாகிஸ்தான் தன்னால் ஊக்குவிக்கப் பட்ட பயங்கரவாதத்தின் பயனை அனுபவிக்கத் தொடங்கி விட்டது. பாகிஸ்தானுக்கு தெரிந்ததெல்லாம் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான்” என கூறி உள்ளார்.