ஆண்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியா 419 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் 222 ரன்களும் எடுத்தன.

பின்னர், 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 4வது நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் கோலி 51 ரன்களில் அவுட்டாக, அந்த பொறுப்பை ரஹானே எடுத்துக்கொண்டார். அவர் 102 ரன்கள் அடித்து அவுட்டானார். அனுமன் விஹாரி தன் பங்கிற்கு 93 ரன்கள் அடித்து சத வாய்ப்பை நழுவ விட்டார்.

இறுதியில், 7 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் எடுக்கப்பட்டபோது கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.