கொழும்பு:

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை  கொண்டாடும் விதமாக, மூன்று நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நாளை (6-ந்தேதி) ஆரம்பிக்க இருக்கிறது. . வருகிற 18-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.  ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

கேப்டன் விராட்கோலி, டோனி, புவனேஷ்வர்குமார், பும்ரா, குல்தீப்யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா போன்ற முன்னணி வீரர்களுக்கு 3 நாடுகள் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ‌ஷர்துல் தாகூர், விஜய்சங்கர், ரி‌ஷப்பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியை ரோகித்சர்மா வழி நடத்தி செல்கிறார். அவர் கேப்டனாக இருந்த நான்கு 20 ஓவர் போட்டியிலும் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு சன்டிமால் கேப்டனாக உள்ளார்.

உபுல்தரங்கா, குஷால் மெண்டீஸ், திசாரா பெரைரா, அகிலா தனஞ்செயா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் விளையாடுகிறார்கள்.  காயம் காரணமாக மேத்யூஸ் இந்த போட்டியில் ஆடவில்லை. அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான டிக்வெலா நீக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணிக்கு மகமதுல்லா கேப்டனாக உள்ளார். அந்த அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான சகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியிருக்கிறார்.

முஷ்பிகுர் ரகீம், தமிம் இக்பால், முஷ்டாபிசுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

(அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது)