டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக உருமாறிய கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இது சாதாரண வைரஸை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தியும், தீவிரப்படுத்தியும் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஏப்ரல் 1ந்தேதி முதல்  45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.

அதன்படி,  45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தாமதமின்றி தடுப்பூசி போடுவது அவசியம் என மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.