டெல்லி: விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்து உள்ளார்.

சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு வரிசையை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் நிதின் கட்கரி பேசியதாவது:

இந்தியாவில் சாலை பாதுகாப்பு சவால்கள் மற்றும் செயல்திட்டத்தை வகுத்தல் என்பது கருத்தரங்கின் மையக்கருவாகும். நாட்டில் ஓராண்டில் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர், 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 415 பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர்.

சாலை விபத்துகளில் அமெரிக்கா மற்றும் சீனாவையே இந்தியா மிஞ்சி முதலிடத்தில் உள்ளது. விபத்துகளால் ஏற்படும் சமூக, பொருளாதார இழப்புகள் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3.14 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது.

பலியாவோரில் 70 சதவீதம் பேர் 18 முதல் 45 வயது பிரிவை சேர்ந்தவர்கள். விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது. 5,000 ஆபத்து மிக்க பகுதிகள் கண்டறியப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பேசினார்.