சிட்னி :

ந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

மழை காரணமாக தடைபட்டுள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் முதல் முறையாக சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிலாரே போலோசாக் என்ற பெண்மணி நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த இவர் இதற்கு முன் 2019 ம் ஆண்டு நமீபியா – ஓமன் அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. யின் இரண்டாம் நிலை அணிகளுக்கான ஒரு நாள் போட்டியில் நடுவராக அறிமுகமானார்.

ஐ.சி.சி. விதிகளின் படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவரை நடுவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அனுமதி உள்ளதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிலாரே போலோசாக்கை பரிந்துரை செய்துள்ளது.

மைதானத்தில், பால் ரைபில் மற்றும் பால் வில்சன் ஆகிய இரு நடுவர்கள் களமிறங்க இருக்கும் இந்த போட்டியில். போலோசாக், நான்காவது நடுவராக செயல்படுவார்.

போட்டியின் நடுவராக டேவிட் பூன் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆட்டத்தில், ப்ருஸ் ஆக்ஸன்போர்ட் மூன்றாவதாக டி.வி. அம்பயராக இருப்பார்.

போட்டியின் போது, பந்து மாற்ற வேண்டியிருந்தால், அதை கொண்டுவருவது, உணவு மற்றும் தேநீர் இடைவேளையின் போது ஆடுகளத்தை ஆய்வு செய்வது, தேவை படும்போது மூன்றாவது நடுவருக்கு மாற்றாக செயல்படுவது ஆகியவை நான்காவது நடுவரின் முக்கிய பணியாக இருக்கும்.