ஹாமில்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வெலிங்டனில் இன்று துவங்குகிறது. இந்திய அணியில் புதிய துவக்க ஜோடிகள் களம் காண்கின்றனர்.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே காயமடைந்துவிட்டதால், இவர்களின் இடத்தில் பிரித்வி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையப் போட்டி பகலிரவுப் போட்டியாக நடைபெறுகிறது. இந்தியாவின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பராக செயல்படுவதோடு, பின்வரிசை வீரராகவும் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கேதார் ஜாதவ், ஷிவன் துபே மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு இடம் கிடைப்பது சிக்கல்தான் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், இந்திய அணியில், ஷர்துல் தாகுர், முகமது ஷமி அல்லது நவ்துப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், காயமடைந்துள்ளதால் போட்டியில் இடம்பெறமாட்டார் என்றும், கேப்டனாக டாம் லதாம் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.