லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்று ஆரூடம் கூறியிருக்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

அவர், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு டெஸ்ட்டில் தோற்றவுடன், அந்த டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்து ஒயிட்வாஷ் ஆகும் என்று கணித்திருந்தார் மைக்கேல் வாகன். ஆனால், பின்னால் நடந்தவற்றின் அடிப்படையில், இந்திய அணி தனது முகத்தில் கரியைப் பூசிவிட்டது என்று கூறி வருந்தியிருந்தார்.

தற்போது, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையடுத்து, வேறொரு ஆரூடத்தை வழங்கியுள்ளார். அதாவது, இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வெல்லும் என்பதுதான் அது.

இந்திய சுற்றுப்பயணத்தில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது இங்கிலாந்து. மேலும், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களிலும் ஆடுகிறது.