புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகும் என்று தெரிவித்துள்ளார் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

மேலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தாண்டு பிரிட்டனை விஞ்சி, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் கூறியுள்ளார் அவர்.

இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, “நாம் தற்போது 2.8 டிரில்லியன் டாலர் பொருளாதார பலம் கொண்டவர்கள். தற்போது இந்த நிலையிலிருந்து 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாறிக்கொண்டுள்ளோம். மேலும், அடுத்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் 2024ம் ஆண்டு காலகட்டத்தில் 5 டிரில்லியன் பொருளாதார பலம் கொண்ட நாடாக மாறுவோம்.

இந்தாண்டில் நாம் பிரிட்டனை பொருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளுவோம். வரும் 2030ம் ஆண்டில், நாம் கட்டாயமாக 10 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார சக்தியாக மாறியிருப்போம்” என்றார்.