ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் காரணமாக இருந்தார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடி வருகிறது.

இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 ஆக்லாந்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க விரர்களாக கப்தில், காலின் முன்ரோ களமிறங்கினர். ஆரம்பம் முதலே வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அணியின் ரன் 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னிலும், அவரை தொடர்ந்து முன்ரோ 33 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.  இந்திய அணியின் அசத்தல் பவுலிங்கால், பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர். சர்மா 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 11 ரன்களில் அவுட்டானார்.

பின்னர் ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி 135 ரன்கள் எடுத்து, 7 விக். வித்தியாசத்தில் வென்றது.

சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் கேஎல் ராகுல். 2 சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 3வது டி20 போட்டி வரும் 29 நடைபெற உள்ளது.