சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது.

விபத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந் நிலையில் இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட, மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கடந்த 27ம் தேதி இயக்குனர் ஷங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

நாளை மறுநாள் இந்தியன்2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கேதான் இருந்ததாக கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.