டில்லி:

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோல பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது.

புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதில் இருந்தே  இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான் இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியதாகவும்,  மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அங்கு  செயல்பட்டு வந்த இரண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டடதாகவும், இந்த தாக்குதலுக்கு சுமார்  1000 கிலோ எடைகொண்ட வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட தாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி இருப்பதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. முஸாபராபாத் ((Muzafarabad)) பகுதியில் வான் எல்லையை தாண்டி இந்திய போர் விமானங்கள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் (( Asif Ghafoor)) தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.