டெல்லி: லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2.5.கி.மீ தூரம் தூரம் பின் வாங்கியது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல்  ஏற்பட்டது.

லடாக் எல்லையில் சீனா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதை தணிப்பதற்காக இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 06ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந் நிலையில், லடாக் எல்லையில் இருந்து இரு நாட்டு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2.5 கி.மீ., தூரம் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில்  சீன ராணுவம் பின் வாங்கி இருக்கிறது.