பழனி:
கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி, சாமி தரிசனம் செய்தார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் நேற்று காலை 10 மணி அளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். உடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். அப்போது நடராஜன், பழனி கிரிவீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான முடிக்காணிக்கை நிலையத்தில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அதன்பிறகு அவரும், அவரது குடும்பத்தினரும் ரோப் கார் மூலம் பழனி மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு நடராஜன் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ரோப் கார் மூலம் மீண்டும் அவர் அடிவாரத்திற்கு சென்றார். இதற்கிடையே பழனி முருகன் கோவிலுக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வந்ததை கண்ட சில பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்

கிரிக்கெட் வீரர் நடராஜன் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்ததற்காகவும், தனக்கு குழந்தை பிறந்ததற்காகவும் பழனி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தியதாக தெரிகிறது.