டில்லி

ரும் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமாகும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதாகப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.   நேற்று முன் தினம் வெளியான தகவலின்படி இந்த கணக்கு வருடத்தின் இரண்டாம் காலாண்டான ஜூலை – செப்டம்பர் கால கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக குறைந்தது.  இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாகும்.

இந்தியப் பொருளாதாரம் இந்த காலாண்டில் 4.5% அளவே இருக்கும் என ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் ஊகம் அளித்துள்ளனர்.   ஆனால் மத்திய அரசு அதை கண்டுக் கொள்ளாமல் உள்ளது.    அத்துடன் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தற்போது ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அவர் தனது டிவிட்டர் கணக்கைத் தனது குடும்பத்தினர் மூலம் இயக்கி தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் தனது டிவிட்டரில், “முன்பே கூறியபடி இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.5% ஆகக் குறைந்துள்ளது.  வரும் மூன்றாம் காலாண்டில் இந்த சதவிகிதம் வளர்ச்சி அடைய வாய்ப்பில்லை.   மேலும் குறையவே வாய்ப்புள்ளது.   இதனால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு அடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாஜகவின் இந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்காக தற்போது தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட் மாநில மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் அக்கட்சியை நிராகரிக்க வேண்டும் எனவு இந்த வாய்ப்பு முதன்முதலாக ஜார்க்கண்ட் மாநில மக்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் பதிந்துள்ளார்.