டெல்லி: நாட்டின் பொருளாதாரம் ஐசியூவை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக மோடியின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு அவர் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். அதில் தான் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு: வாராக் கடன், பணமதிப்பிழப்பு ஆகிய காரணங்களால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு வழக்கமானது அல்ல.

ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் திருப்பிச் செலுத்தப்படாத கடன் 5 லட்சம் கோடி ரூபாயாகும். முக்கிய நகரங்களில் மட்டும் 10 லட்சம் கோடி மதிப்புள்ள வீடுகள் விற்கப்படவில்லை.

நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை, வங்கிகளும் நிறுத்தி விட்டன. இந்த அறிகுறிகள் எல்லாம், 1991ம் ஆண்டு ஏற்பட்ட நிலையை உருவாக்கும் என்பதை காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.