கொல்கத்தா: 15 வயதுடையோருக்கான தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கோல்கணக்கில் எளிதாகப் பந்தாடியது.

தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்(15 வயது) மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வருகிறது. இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தியது. இலங்கையால் ஒரு கோல்கூட போட முடியவில்லை.

இந்திய தரப்பில் ஹிமான்ஷு மற்றும் மஹேசன் ஆகியோர் கலக்கலாக ஆடி அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். மொத்தம் 3 போட்டிகள் இதுவரை ஆடியுள்ள இந்திய அணி, அனைத்திலும் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.