டில்லி

சீனப்படைகள் லடாக் பகுதியில் இருந்து வெளியேற இந்திய அரசு பேரம் பேசுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய லடாக் எல்லையில் பாங்காங் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீனப்படைகள் முகாம் இட்டிருந்தன.  இந்த படைகளை வெளியேற நடந்த பேச்சு வார்த்தையில் பல கட்டங்களில் தோல்வி ஏற்பட்டது.  அந்தப் பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானவை எனச் சீன ராணுவம் தெரிவித்தது.   இந்நிலையில் அங்கு கடந்த 15 ஆம் தேதி அன்று சீனபபடைகள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர்.

இதையொட்டி அங்குள்ள சீன வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கடந்த ஏப்ரல் மாத இடையில் இருந்த நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் எனவும் வற்புறுத்தியது.  ஆனால் சீனப்படைகள் இன்னும் பிங்காங் மற்றும் கல்வான் பகுதிகளில் இருந்து வெளியேறவில்லை என செய்திகள் வருகின்றன.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

“சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியா அதைத் திரும்பப் பெறப் பேரம் பேசுகிறது.

சீனா அந்த இடம் இந்திய நிலப்பகுதி இல்லை என்கிறது.

நமது பிரதமர் வெளிப்படையாகவே சீனாவுக்கு ஆதரவு அளிக்கிறார்

பிரதமர் ஏன் சீனாவுக்கு ஆதரவு அளித்து நமது இந்திய ராணுவத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை?”

 எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.