டில்லி:

ரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் பொதுமக்களால்  தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கடந்த 5 நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல மாநில மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வரும் 17ந்தேதி திங்கட்கிழமை நாடு தழுவிய போராட்டத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்து உள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆம் தேதி கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உதவியாளர்கள் மருத்துவர்களை தாக்கியுள்ளனர். இதுபெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், அவரது எச்சரிக்கையை மீறி போராட்டம் நீடித்து வருகிறது. மேற்கு வங்க மாநில மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக டில்லி, மும்பை, ஐதராபாத் உள்பட பல மாநில மருத்துவர்கள் சங்கம் மற்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை (ஜூன் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் அன்றைய தினம் மருத்துவ பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.