ராமேஸ்வரம்:

மிழக மீனவர்கள்மீது இந்திய மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இலங்கை கடற்கடையினர்தான் துப்பாக்கி சூடு நடத்தியும், ஆயுதங்களால் தாக்கியும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

தற்போது, அதுபோன்ற செயலை இந்திய கடற்படையினர் செய்துள்ளது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பதில் அளித்துள்ளனர்.

ஆனால், கடலோர கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்கள் என்றால் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என கூறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து மீனவர்கள்மீது ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கி உள்ளனர். இந்திய கடற்படையினரின் இந்த தாக்குதலில்,  பிச்சை ஆரோக்கியம், ஜான்சன் என்ற இரண்டு மீனவர்கள் காய மடைந்தனர்.

அவர் இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினர்தான் இதுபோன்ற அந்துமீறலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, இந்திய கடற்படையினரே இதுபோன்று இந்தியில் பேசு என்று கூறியும், ரப்பர் குண்டுகளால் தாக்கியும் உள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை கண்டித்து  போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளதாகவும், தூப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.