சென்னை:

மிழக மீனவர்கள் மீது ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தியது  இந்தியக் கடலோர காவல்படையினர் அல்ல என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

கடந்த 13ந்தேதி இரவு  ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து சென்ற இந்திய கடலோர காவல்படையினர், அவர்களை விசாரணை நடத்தியதாகவும், அப்போது, தங்களுக்கு தமிழ் தெரியாது என்றும், இந்தியில் பேசும்படி கூறி தாக்கியதாக கூறப்பட்டது.

மேலும், தமிழக மீனவர்கள்மீது ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர்.  இந்த தாக்குதலில்,  பிச்சை ஆரோக்கியம், ஜான்சன் என்ற இரண்டு மீனவர்கள் காய மடைந்தனர். அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது, தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்த வில்லை. தமிழக மீனவர்கள் காண்பித்த ரப்பர் தோட்டாக்கள் இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமானது அல்ல. எனவே தாக்குதல் நடத்தியது இந்தியக் கடலோரக் காவல்படைதான் என்று யாரும்  கூற வேண்டாம்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகே, சுட்டது யார் என்பது தெரியும் என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், , மீனவர்கள் கூறியது உண்மையாகவும் இருக்கலாம். தீவிரமாக விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியும் என்று கூறினார்.