துபாய்:

துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்று, அங்கு குற்ற வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளை, இந்தியாவுக்கு அனுப்பி, இங்கு சிறை தண்டனை பெறும் வகையில் இந்தியா துபாய் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் உள்ள நிலையில், அது செயல்படுத்தாத நிலையில், தற்போது மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து துபாய் சிறையில் வாடும் 77 இந்திய கைதிகள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, இங்குள்ள சிறைகளில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையே   ஏற்பட்ட தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி UAE சிறையிலிருக்கும் இந்தியர்கள் விருப்பப் பட்டால் அவர்களின் மீதி தண்டனை காலத்தை இந்திய சிறைச்சாலைகளில் கழிக்க முடியும். ஆனால், அங்கு தண்டனை பெறும் பெரும்பாலான கைதிகள் இந்தியாவுக்கு வறு மறுத்து விட்டனர். இதுகுறித்து அப்போதைய இந்திய தூதர்  சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது தூசி தட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் அமீரக சிறைச்சாலையில் உள்ள இந்திய கைதிகளை இந்திய சிறைச்சாலைகளில் இடம் மாற்றும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி முதல் கட்டமாக துபாய் சிறையில் உள்ள 77 இந்திய கைதிகள் இந்தியாவுக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துபாயில் இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சிறைகளில்  தண்டனை அனுபவித்து வரும் இந்தியாவை சேர்ந்த கைதிகளை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படஉள்ளதாகவும், இங்குள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள  இந்திய கைதிகள், இந்திய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட பின்னர்,  உரிய தண்டனை காலம் நிறைவு செய்தவுடன் விடுவிக்கப்படுவார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தரப்பட்ட தண்டனைக் காலம் இந்திய சிறைச்சாலைகளிலும் முழுமை யாக நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக, ஒருவரின் தண்டனைக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை வழக்கப்பட்டு, அதில் இரண்டு ஆண்டு காலம் துபாய் சிறையில் தண்டனை அனுபவித்திருந்தால், மீதமுள்ள 3 ஆண்டு சிறைத்தண்டனை இந்தியச்சிறைச்சாலையில் அனுபவிக்க வேண்டும். ஆனால், மரண தண்டனை கைதிகளுக்கு இது பொருந்தாது.

இதன்படி முதல்கட்டமாக 77 இந்திய கைதிகள் துபாய் சிறையில்  இருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.