முன்பதிவு கட்டணம் பிடித்தம்..  ரயில்வேத்துறை அடாவடி..

’’ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’’ எனப் பழமொழி சொல்லி பயணிகளைக் கடுப்படிக்கும் ரயில்வேத்துறை குறித்த தகவல் இது.

‘’ஊரடங்கு காலத்தில் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணம் திருப்பி வழங்கப்படும்’’ என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால் இதனைச்  சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகள்  உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே ஆன்லைன் மூலம் செலுத்தி இருந்த கட்டணத்தைத் திருப்பி கேட்கும் பயணிகளுக்கு,, முன்பதிவு கட்டணத்தை பிடித்தம் செய்து விட்டு, மிச்ச பணத்தை மட்டுமே கொடுக்கின்றனர், ரயில்வே அதிகாரிகள்.

’’மொத்த பணமும் திருப்பி தரப்படும்’ என்று ரயில்வே துறை அறிவித்துள்ளதே?’ எனப் பயணிகள் கேட்டால்-

’அதெல்லாம் அரசாங்க பாலிசி’’ என்று அசால்டாக,பதில் சொல்கிறார்கள், அதிகாரிகள்.

பயணிகளைச் சுரண்டி ரயில்வே கொள்ளை அடிப்பதாகப் பயணி ஒருவர் ட்விட் செய்துள்ளார்.

‘’ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ள 39 லட்சம் முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு கட்டணத்தை பிடித்தம் செய்வதன் மூலம் 7 கோடி ரூபாயை ரயில்வேக்கு மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளனர் விசுவாச அதிகாரிகள்’’ என்று தனது டிவிட்டரில் அந்த  பயணி குறிப்பிட்டுள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்