ஜெனிவா: வடஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 850 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆப்ரிக்காவின் தெற்கு சூடான் இனப்போரால் பாதிக்கப்பட்ட நாடாகும். எனவே, அங்கு ஐ.நா. அவையின் சார்பில் அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படையில் இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய தரப்பில் 2342 வீரர்களும், 25 காவல்துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மொத்தம் 850 பேர் தேர்வுசெய்யப்பட்டு, சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக அவர்களுக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும், இதே அமைதிப் படையில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த மொத்தம் 323 பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சிறந்த சேவைக்காக அவர்களுக்கு கடந்த மாதமே ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.