டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற்ற பின்னர், 14 நாட்கள் கழித்து ப்ளாஸ்மா தானம் அளிக்கும் வகையில், டெல்லியில் முதன்முறையாக ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி அரசு Liver and Biliary Sciences (ILBS). நிறுவனத்தில் இந்த ப்ளாஸ்மா வங்கியை அமைத்துள்ளது. இதுகுறித்து பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருப்பதாவது:
குணம் பெற்றவர்கள் 1031 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களை ப்ளாஸ்மா தானம் அளிப்பவர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.  வாட்ஸ் அப் எண் 8800007722க்கு அழைத்து, தானம் எங்கு பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அரசு மருத்துவர் ப்ளாஸ்மா தானம் வழங்க விரும்புபவரைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொண்டு, தானம் தர அழைப்பார். தானம் அளிக்க அளிக்க வரும் போது அதற்கான போக்குவரத்து செலவை அரசு தரும். 18 முதல் 60 வயதுக்கு இடையிலான வயதில் இருப்பவர்களும், 50 கிலோ எடைக்கு குறையாமலும் இருந்தால் அவர்கள் ப்ளாஸ்மா தர தகுதி ஆனவர்கள்.
கருவுற்ற தாய்மார்கள், நீரிழிவு அளவுகளில் சமநிலை அற்றவர்கள், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருப்பவர்களும் ப்ளாஸ்மா தானம் செய்யமுடியாது என்று தெரிவித்தார்.