இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை தன்னார்வ முறையில், பலரையும் கவரும் விதத்தில் செய்துவருகிறார்.

இந்தூர் நகரின் முக்கிய சாலையில், இவர் போக்குவரத்து விழிப்புணர்வை நடனமாடியும், சீட் பெல்ட் அணியாதோருக்கு அதை மாட்டிவிட்டும், இருசக்கர வாகனத்தில் ‍அதிக நபர்களை ஏற்றி வருவோர்களிடம் கையெடுத்து கும்பிட்டும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த மாணவியின் பெயர் சுபிஜெயின். இவர் கல்லூரி ஒன்றில் எம்பிஏ பட்டப்படிப்பை படித்து வருகிறார். போக்குவரத்து விதிகளை மீறும் பலரிடம் அன்பான முறையில் புத்திமதியும் கூறுகிறார்.

இவரின் இந்த செயல் பலரையும் கவர்ந்துள்ளது. இவரின் சேவையை வீடியோ எடுத்த சிலர், அதை சமூகவலைதளங்களில் பகிர, அந்த வீடியோக்களும் படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.