டில்லி:

டிவி செட் ஆப் பாக்ஸ்களில் சிப் பொருத்தும் முறையை அமல்படுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிராய்க்கு அமைச்சகம் அளித்துள்ள திட்ட அறிக்கையில், ‘‘புதிய செட் ஆப் பாக்ஸ்களில் சிப் பொருத்துமாறு டிடிஹெச் ஆபரேட்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த சேனல் அதிகம் பார்க்கப்படுகிறது? எவ்வளவு நேரம் பார்க்கப்படுகிறது? என்பதை அறியமுடியும்’’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இதன் மூலம் விளம்பரதாரர்கள் மற்றும் மத்திய அரசின் டிஏவிபி விளம்பர செலவுகளுக்கு உதவியாக இருக்கும். அதோடு நாட்டின் டிவி நேயர்களின் எண்ணிக்கை அளவீடு செய்யும் பிஏஆர்சி.யின் தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு முடிவுகட்டப்படும்.

இதற்கு மாற்று என்பது தற்போது வரை இல்லை. எனவும் நேயர்களின் அளவீடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்ற விபரத்தையும் இந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. இந்த அளவீடை செய்ய யாரும் அவர்களது டிவி.யில் அனுமதிக்கவில்லை. தன்னார்வலர்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது’’ என்றார். இந்த குற்றச்சாட்டுக்களை பிஏஆர்சி மறுத்துள்ளது.