சென்னை,

ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியான பெருமாள்சாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழ அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையம் ஜெ.மரணம் குறித்து பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. பல மருத்துவர்கள் உள்பட, முன்னாள் தலைமை செயலாளர்கள்  ஷீலா பாலகிருஷ்ணன்,  ராமமோகன் ராவ் மற்றும், ஜெ. உறவினர்களான  ஜெ.தீபா, தீபக், மாதவன்உ ள்பட அரசு மருத்துவர்கள்  பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அதுபோல சசிகலா தரப்பினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து இளவரசி மகள் விஷ்ணுபிரியா விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து மருத்துவர் சுதா சேஷையன், அப்பல்லோ மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில்,  ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) அவர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் 9-ந்தேதி ஆஜராகவும், அவரது குடும்ப டாக்டர் சிவக்குமார் 8-ந்தேதியும் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.