டில்லி

பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சிறு சேமிப்புக்களின் வட்டி விகிதம் குறையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் தற்போது சிறு சேமிப்பில் ரூ.12 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் வங்கியில் ரூ.114 லட்சம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.   தேசிய சிறு சேமிப்பு பத்திரங்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் போல 7.9% வட்டி வழங்கப்படுகிறது.    அதே வேளையில் வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகளுக்கு 6.15 வட்டி அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டத்துக்கு 8.4% வட்டியும் முதியார் ஐந்து வருடச் சேமிப்பு திட்டத்துக்கு 8.6% வட்டியும் தரப்படுகிறது.  சேமிப்பு திட்டங்களில் இந்த இரு திட்டங்களுக்கு மட்டுமே அதிக வட்டி வழங்கப்படுகிறது.   ஜனவரி முதல் மார்ச் வரையிலான நடப்புக் காலாண்டுக்கு சிறு சேமிப்பு உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற இனங்களுக்கான வட்டி விகிதம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.  இந்த மாறுதல் பிராவிடண்ட் ஃபண்ட் உள்ளிட்ட அனைத்து சேமிப்பு வட்டி விகிதத்திலும் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.   குறிப்பாக அரசு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைந்து வருவதால்  அதே நிலை சேமிப்புக்களுக்கும் உண்டாகலாம் என கூறப்படுகிறது.

எனவே வரும் நிதியாண்டின் முதல் காலாண்டு முதல் பிராவிடண்ட் ஃபண்ட், மற்ற சிறு சேமிப்புக்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.    இந்த வருடத்துக்கான ஜிடிபி 3.3% ஆகக் குறைந்துள்ளதால் நிதிநிலையில் எதிர்பார்க்கப்பட்ட 3.8% பற்றாக்குறையை விட அதிகம் ஆனதால் அரசு இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.