டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள்  60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந் நிலையில் குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் தீவிரம் அடைய 500 டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.

டெல்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. இந் நிலையில் டிராக்டர் பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நள்ளிரவு வரை இணையதள சேவைகளை துண்டித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.