டெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைககு டெல்லி  சிறப்புநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் கூறப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்டு மாதம் 21ம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிபிஐ கைது செய்த  வழக்கில், உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில், சிதம்பரம் தரப்பில், உச்சநீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், வரும் 22,23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில்,டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்,  ப.சிதம்பரத்திடம் இரண்டு நாள் விசாரிக்க அனுமதி வழக்கியுள்ளது.