டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17ந்தேதி அவரை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் அவருக்கு வீட்டு உணவு வழங்கப்படுவது குறித்து சிறிது நேரத்தில் தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்து உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் ஜெயிலில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் ஏற்கனவே உத்தரவிட்டி ருந்தார். அதன்படி, திகார் ஜெயிலில் உள்ள 7வது எண்ணைக் கொண்ட ஜெயில் பகுதியில் உள்ள தனி அறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவரது காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில்  மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ப.சி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல்,  ப.சிதம்பரத்தின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு வீட்டு உணவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ப.சிதம்பரத்திற்கு வீட்டு உணவு வழங்குவது தொடர்பாக சிறிது நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி அஜய் குமார் குஹார், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் (அக்டோபர் 17 வரை)  நீட்டித்து உத்தரவிட்டார்.

இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு கவிஞர் வைரமுத்துவும், சிதம்பரத்தின் மனைவி நளினியுடன் வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து அவருக்கு தைரியம் கொடுத்தார், மேலும்,   “எதுவும் உங்களை வீழ்த்த முடியாது. நீங்கள் இன்னும் அதிக உயரங்களை அடைவீர்கள் ” என்று வாழ்த்தினார்.