மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் மும்பை பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பஞ்சாப்அணி வீரர் கேஎல் ராகுல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அத்துடன் மும்பை அணிக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே  இன்று இரவு 8 மணிக்கு  மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

இதில்  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, , பஞ்சாப் அணி மட்டையுடன் களமிறங்கியது.

அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் அதிரடியாக  களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரம் இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அதிரடி ஆட்டங்களை தொடர்ந்தனர்.

மும்பை பவுலர்களின் பந்துகளை நாலாபுரமும் கெயில் சிதறடித்தார். அதுபோல ராகுலும் தன் பங்குக்கு பந்துகளை விளாசினார்.  இந்த நிலையில் கெயில் அரை சதம் அடித்த நிலையிலும், மீண்டும் தங்களது அதிரடி ஆட்டத்தை  தொடர்ந்தனர். குறிப்பாக, கெயில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

இதன் காரணமாக  11 வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. இந்த நிலையில், கெயில் அவுட்டாகி வெளியேறினார். அவர் 36 பந்துகளில் 7 சிச்கர், 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், சாம் குர்ரன் 8 ரன்னிலும் தொடர்ந்து வெளியேறி ராகுல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்தார்.

ராகுல் 63 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 100 ரன்கள் எடுத்து தனது முதல் ஐபிஎல் சாதனையை நிகழ்த்தினார்.  அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்களும் ராகுலுக்கு தங்களது வாழ்ததுக்களை பலத்த கோஷத்துடன் தெரிவித்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

இதன் காரணமாக மும்பை அணிக்க 198 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.