கொல்கத்தா:

நேற்று இரவு கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபில் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியை சேர்ந்த பவுலர் குல்தீப் யாதவின் ஒரு ஓவரில், ஆர்சிபி அணியை சேர்ந்த மொயின் அலி 27 ரன்கள் அடித்து விளாசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவுலர் குல்தீப் யாதவ் கண்ணீர் விட்டார். அவரை சக வீரர்கள் தேற்றினர்.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி அணி அபாரமாக ஆடியது. கோலி 100 ரன்கள் எடுத்து 5வது சதம் அடித்து சாதனை படைத்த நிலையில், அவருடன் இணையாக ஆடிய மொயின் அலியும் சிறப்பாக ஆடினார்.  மொயீன் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இந்த போட்டியின்போது, 16-வது ஓவரை குல்தீப் வீசினார். அவரது பந்தை ஆர்சிபி வீரர் மொயின் அலி சரமாரியாக அடித்து விளாசினார்.  அந்த ஒரு ஓவரில் மட்டும், 3 சிக்ஸர்கள், 2  பவுண்டரிகள் உள்பட  27 ரன்களைக் குவித்தார்.

‘அந்த ஓவரின் கடைசிப் பந்தில் மொயீன் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் தனது ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்ததால் குல்தீப் யாதவ் கடுமையாக மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில், அவரது கண்ணில் கண்ணீர் திரண்டது. சக வீரர்களான கிறிஸ் லின், ரஸல், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் அவரைத் தேற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.