டெல்லி:

கொரோனா மிரட்டல் காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை  73 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், ஒருவர் மரணம் அடைந்துள்ளதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மக்கள் கூடுவதற்கு தடை செய்வது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், இம்மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவதிலும் விசா தடை காரணமாக சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் குறித்து  கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை, ஐபிஎல்  திருவிழாவை ஒத்திவைப்பது நல்லது என பிசிசிஐக்கு அறிவுரை கூறியிருந்தது,  அதுபோல பிசிசிஐயும்  வரும் 14 ஆம் தேதி பிசிசிஐ பொதுக்குழுவில் இது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது, ஐபிஎல் 2020 போட்டிகளை ஏப்ரல் 15ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.