மும்பை: 2020ம் ஆண்டு நடைபெற வேண்டிய ஐபிஎல் 13வது சீசனை, யுஏஇ நாட்டில் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பொருட்டு, மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்.
போட்டியை நடத்துவதற்கு அமீரக அரசு அனுமதித்துவிட்டதாகவும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
பல்லாயிரம் கோடிகள் புழங்கும் நிகழ்வு என்பதால், ஐபிஎல் போட்டிகளை நடத்தியே தீருவது என்று பிசிசிஐ அமைப்பு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிடுகிறது.
கடந்த 2014ம் ஆண்டில் ஏற்கனவே அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. எனவே, இந்தாண்டு போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், மீண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.