கொல்கத்தா:

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 3விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 43-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. . இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா  மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  கிறிஸ் லின் ரன் ஏதும் எடுக்ககாத நிலையில், 3-வது பந்திலேயே, வருண் ஆரோனின் பந்து வீச்சில் கிளின் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லும் 14 ரன்கள் எடுத்த நிலையில், வருன் ஆரோனின் பந்துவீச்சுக்கு பலியானார். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் சோகமானார்கள். தொடர்ந்து களமிறங்கிய  நிதிஷ் ராணாவும் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக் காத நிலையில், 10 ஓவர்களில் கொல்கத்தா  அணி 3 விக்கெட்டை இழந்து  49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய  கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆட்டத்தை தொடர, ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் துரத்தியடித்தார். இன்னொரு பக்கம் சுனில் நரின் (11 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (14 ரன்), கார்லஸ் பிராத்வெய்ட் (5 ரன்) கைகொடுக்க தவறினாலும் தினேஷ் கார்த்திக் தனி வீரராக போராடி அணியை தூக்கி நிறுத்தினார்.

ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரிலும் பவுண்டரி, சிக்சர்கள் நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். செஞ்சுரியை எட்ட அவருக்கு கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.  கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 75 ரன்களை திரட்டினர்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் 97 ரன்களுடன் (50 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை  நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் 5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்து அட்டகாசமாக ஆடி வந்தனர்.  ரஹானே 34 ரன்களிலும் (21 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம்சன் 22 ரன்னிலும் வெளியேறினர்.  பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை தருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 11 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.  அதுபோல கேப்டன் ஸ்டீவன் சுமித் 2 ரன்னிலும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னிலும் வெளியேற ஆட்டம் தகிடுத்தத்தம் போட்டது.

சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஸ் சாவ்லாவும், சுனில் நரினும் இணைந்து  5 விக்கெட்டுகளை காலி செய்தனர்.

இந்த பரபரப்பபான சூழ்நிலையில் களமிறங்கிய இளம்வீரரான 17 வயதான ரியான் பராக் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து,  ராஜஸ்தான் அணியை மீட்டு வந்தார்.  அவர், 31 பந்தில்  5 பவுண்டரி, 2 சிக்சர் கொடுத்து  47 ரன்களில் ‘ஹிட் விக்கெட்’ ஆனார்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. இதனால் மைதானமே பரபரப்பாக காணப்பட்டது.  இந்த நிலையில் கடைசி ஓவரின் முதல்பந்தை எதிர்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்சருக்கும் அனுப்பி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதன் காரணமாக  ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4-வது வெற்றியை தனதாக்கியது.

ஜோப்ரா ஆர்ச்சர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தாவுக்கு மொத்தத்தில் இது 7-வது தோல்வியாகும்.

ஆட்ட நாயகனாக வருன் ஆரோன் தேர்வுசெய்யப்பட்டார்.