தெஹ்ரான்:

தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி மற்றும் தென்கொரியாவின் முதல் துணை வெளியுறவு அமைச்சர் சோய் ஜாங் குன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது, ஈரான் தென் கொரியாவின் சியோலில் உறைந்த அன்னிய செலாவணி சொத்துகளை விடுவிக்க கோரியுள்ளது.

தென் கொரியாவின் எண்ணெய் டேங்கரான ஹான்குக் செமியை முன்கூட்டியே விடுவிக்கும் முயற்சியில் முதல் துணை வெளியுறவு அமைச்சர் நேற்று தெஹ்ரானுக்கு வந்துள்ளார். இது சுற்றுச்சூழல் நெறிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றாத காரணத்தால் இஸ்லாமிய புரட்சி காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்த அச்சத்தை காரணம் காட்டி, தென்கொரிய வங்கிகள் ஈரானின் அந்நிய செலாவணி சொத்துக்களை சட்டவிரோதமாக முடக்கியுள்ளனர் என்று அராச்சி நேற்று நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தென் கொரியா வாஷிங்டனின் மிரட்டி பணம் பறிக்கும் கொள்கைகளுக்கு அடிபணிவதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை, இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் இல்லை என்று ஈரானிய தூதர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை அளிக்குமாறும், இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழிமுறையை கண்டு பிடிக்குமாறும் ஈரானிய தூதரான அப்பாஸ் அராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.