நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், “வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியன் டாய்லெட் சிறந்தது” என்று கமல் சொல்ல…. நெட்டிசன்கள் மத்தியில் இதுவும் ஒரு விவாதமாகிவிட்டது.

சிலர், “இந்திய முறையில் கைகளால் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. இதை கமல் ஆதரிக்கிறாரா” என்றெல்லாம் பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

“கமல் சொன்னது மலம் அள்ளும் முறையை அல்ல.. மலம்கழிக்கும் முறையைத்தான்” என்று அதற்கு விளக்கம் கொடுத்துவருகிறார்கள் வேறு பலர்.

கமல் அதைத்தான் சொன்னார்.

சரி, இந்தியன் டாய்லெட் – வெஸ்டர்ன் டாய்லெட்… எது சிறந்தது?

`இயல்பாக குத்தவைத்து அமரும் நிலையில் (Squatting Method) மலம் கழிப்பதே நல்லது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஏன்?

கால்மூட்டுகள் வளைந்து, பிட்டம் (பட்டக்ஸ்) பாதத்துக்கு அருகில் இருக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, மேல் உடம்பை வளைத்து, குந்தியிருக்கும் நிலைதான் (Squatting Position) ஓர் இயற்கையான காலைக் கடன் கழிக்கும் முறை.

ஆதிகாலத்திலிருந்து இன்று வரை மனிதன் தனது அன்றாட காலைக்கடனை இப்படித்தான் கழித்து வருகிறான்.

தாயின் வயிற்றில் குழந்தை கருவாக இருக்கும்போதே இந்த நிலையில்தான் இருக்கும்.

மனிதனின் நாகரிகம் வளர்ந்து, தனக்கென வீடு, உடை, உணவுக்கு வேளாண்மை, தனி மனித-சமூக ஒழுக்கங்கள் எல்லாம் மேம்பட்ட நிலையிலும் குந்தவைத்து அமர்ந்துதான் காலைக் கடனைக் கழித்தான்.

இவ்வாறு காலை கடனை கழிக்கும்போது மனிதர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை சரியாகிறது. அதாவது, குடல் நோய்கள், மலச்சிக்கல், இடுப்புத் தசை நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில், குந்த வைத்து உட்காரும்போது நமது அடிவயிறு அமுக்கப்படுவதால், தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியாகவதிலும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

இதற்குதான் `மலாசனம்’ என்று பெயரிட்டு அழைப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

மலாசனத்தில் குந்தவைத்து அமர்வதன் மூலம், இடுப்பு மூட்டுகள் ஆரோக்கியமாகும். மலாசனத்தின்போது கொடுக்கப்படும் அழுத்தத்தினால், தசைகள் வலிமை யடையும். மூலநோய் வராமல் தவிர்ப்பதும் சாத்தியம்.

ஆனால் தற்போது மக்கள் குனிய மறுப்பதால்தான் பெரும்பாலானவருக்கு அடிவயிறு பெரிதாகி, தொந்தி ஏற்படுகிறது.

இனி, வெஸ்டர்ன் டாய்லெட் குறித்து பார்க்கலாம்.

இது கண்டுபிடிக்கப்பட்டது 16-ம் நூற்றாண்டில்! தொடக்கத்தில் இதற்காக மாதிரி வடிவமே கொஞ்சம் வேடிக்கையாக உருவாக்கப்பட்டது.

ஒரு சிம்மாசனத்தில் ஒரு பெண்ணோ, ஆணோ அமர்ந்திருப்பதுபோல வடிவமைத்திருந்தார்கள்.

இதன் காரணமாக இந்த மாதிரி டாய்லட்டுகள் மக்களை கவரவில்லை. விலையும் அதிகம் என்பதால் யாரும் ஏறெடுத்து பார்க்கவில்லை.

பின்னர்  ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மற்ற மேற்கத்திய நாடுகளும் இதற்கான முயற்சியில் களமிறியங்கியதன் பயனாக இந்த வெஸ்டர்ன் பானி டாய்டலட்டுக்கள் பரவலாக உபயோகத்துக்கு வர ஆரம்பித்துவிட்டது.

19-ம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களுக்கு இது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது.

தற்போது உலக நாடுகள் முழுவதும் வெஸ்டர்ன் பாணி கழிப்பறைகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது.

இதனால் நமக்கு கிடைத்த பலன் என்ன?

சில வருங்களாக மேற்கத்திய நாடுகளில் குடல் சம்பந்தமான அப்பெண்டிசைட்டிஸ், மலச்சிக்கல், மூலநோய், இர்ரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் பரவலானதற்கு காரணங்கள், அவர்களின் உணவு மற்றும் வாழ்வியல் முறைகள்.

இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இதுபோன்ற நோய்களுக்கு முக்கியக் காரணம் நாம் மலம் கழிக்கும் முறை.

அதாவது, மேற்கத்திய பாணி (வெஸ்டர்ன் டாய்லெட்) கழிவறையில் உட்கார்ந்து மலம் கழிப்பது, மனித உடல் அமைப்புக்கு எதிரானது என்கிறார்கள்.

அதனாலேயே இதைத் தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தவும் செய்கிறார்கள்.

இதற்கு மாற்றாக இருப்பது, நம் பழைய பாணி குந்தவைத்து காலைக்கடன் கழிக்கும் முறையே நல்லது என அறிவுறுத்தி உள்ளார்கள்.

மனிதர்களால் மலத்தை அடக்க முடியுமா?

ஆசனவாயில் உள்ள சுருக்கத்தை தம்கட்டி லேசாக இழுத்துப் பிடிப்பதன் மூலம் சிறிது நேரம் அடக்கலாம்.

நீண்ட நேரத்துக்கு இப்படி அடக்க முடியாது. அதாவது, ஆசனவாய் தசையால், இதைத் தன்னிச்சையாக கட்டுப்படுத்த முடியாது.

நமது உடலிலிருந்து வெளியேறும் மலக்கழிவுகளின் நிலை, மலக்குடலுக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ள வளைவைச் சார்ந்து இருக்கிறது. நாம் நின்று கொண்டிருக்கும்போது, 90 டிகிரியில் இருக்கும் `அனோரெக்டல் கோணம்’ (Anorectal Angle) எனப்படும் இந்த வளைவின் விரிவு மலக்குடலுக்கு மேல்நோக்கி அழுத்தம் கொடுத்து, மலம் வெளியேறாமல் வைத்திருக்கும். ஸ்குவாட்டிங் பொசிஷனில் அமரும்போது, இந்த வளைவு சீராகும்.

தோட்டக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறும்போது குழாயில் இருக்கிற முறுக்குத் தன்மை எப்படி வளை வில்லாமல் நேர்த்தன்மைக்கு வருகிறதோ, அதேபோன்று குந்தவைக்கும் நிலையில், நம் மலக்குடலின் வளைவு நேராகி மல வெளியேற்றம் எளிதாகிறது.

ஆக வெஸ்டர்ன் டாய்லெட் வேலைக்காகாது. நம் இந்திய பாணி கழிவறைகளே காலைக்கடன் கழிக்கச் சிறந்தவை என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கர்ப்ப காலங்களிலும், அதிக உடல் பருமனாலும் மூல நோய் வரலாம். அடிவயிற்றில் கொடுக்கப்படும் அழுத்தத்தால், மலக்குடல் பாதிக்கப்பட்டு, மலக்குடல் வழியாக ரத்தம் கசியும் வாய்ப்பும் உண்டு.

அதனால், குந்தவைத்து அமரும் நிலையில் மலம் கழிக்கிறபோது, வயிற்றுப் பகுதியில் அழுத்தம் குறையும். அதோடு, மலம் கழிப்பதும் எளிதாக இருக்கும்.

`எங்களுக்கு வேறு வழியில்லை.. நாங்கள் வெஸ்டர்ன் டாய்லெட்தான உபயோகப்படுத்துவோம் என்பவர்கள், எளிதான மலம் கழிக்க ஏதுவாக,   கால்களுக்குக் கீழே முக்காலிருந்து ஓர் அடி உயர ஸ்டூலைப் போட்டு, அதில் கால்களை வைத்துக்கொண்டு மலம் கழிக்கலாம்.