மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்ட பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: மதுரைக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியது, உயர்நீதிமன்றம் கிளை அமைக்க அடித்தளமிட்டவர் கருணாநிதி. அதுபோல், மதுரையில் ஏராளமான மேம்பாலங்கள், வைகை ஆறு மேம்பாலங்கள், தமிழ் அறிஞர்களுக்கு மணி மண்டபங்கள், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், மதுரை சென்டரல் காய்கறி மார்க்கெட், மதுரை காவேரி, மதுரை விமான நிலையத்தை ரூ.120 கோடி ஒதுக்கி சர்வதேச நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது மற்றும் வைகை, காவேரி கூட்டுக்கடிநீர் திட்டங்கள் போன்றவை திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை. இதுபோல ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் இன்னும் மதுரைக்கு வர காத்திருக்கிறது.

இதுபோல் அதிமுகவினர் எதுவும் மதுரைக்கு செய்ததாக சொல்ல முடியுமா? 2014ம் ஆண்டு மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. பிரதமர் மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அரசிதழலிலும் வெளியிட்டார்கள். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம், இமாச்சல பிரதேசம் என நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக பல நூறு கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் ரூ.12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. கேட்டால் ஜப்பான் நாட்டு நிறுவனம் நிதி ஒதுக்கியதும் மதுரையில் பணிகள் நடக்கும் என்கிறார்கள்.

மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா?. பாஜக ஆட்சியில் ஒரே ஓரு திட்டத்தை தமிழகத்திற்கு அறிவித்து விட்டு அதையும் நிறைவேற்றாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்கள். ஜப்பான் நிதி இல்லை என்றால் மதுரையில் எய்ம்ஸ் வராதா?.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. தமிழகத்தில் 10 மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நடக்கிறது. எந்த ஊரிலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆலோசனைக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில் இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஸ்மார்ட்டாக ஊழல் செய்கிறார்கள். மதுரையை சிட்னியாகவும், சிங்கப்பூராகவும் மாற்றுவதாக உள்ளூர் அமைச்சர்கள் கூறினர்.

ஆனால், தேர்தலுக்கு பிறகு மதுரை அமைச்சர்கள் தலைமறைவாவதுதான் நடக்கும். மதுரை மட்டுமில்லாது தமிழகத்தை மாற்றுவதற்கான கூட்டம்தான் இது. சட்டவிரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். நிச்சயம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும். அப்போது உங்கள் குறைகளும், ஆதங்கங்கமும் தீரும் என்று தெரிவித்தார்.