லக்னோ: கடும் வறட்சி நிலவும் புந்தேல்காண்ட் பகுதியின் பண்டாவில், பிரதமர் மோடியை வரவேற்பதற்காக வீணாக்கப்படும் தண்ணீர் குறித்து விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா.

“பிரதமர் மோடி காவல்காரரா? அல்லது டெல்லியில் இருந்துவரும் மாமன்னரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், மத்தியப் பிரதேச எல்லையோரம் அமைந்த புந்தேல்காண்ட் பகுதியில் அமைந்துள்ள இடம்தான் பண்டா.

பிரியங்கா கூறியுள்ளதாவது, “புந்தேல்காண்ட் பகுதியில் வசிக்கும் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும், கடும் வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

ஆனால், பிரதமரை வரவேற்பதற்காக தொட்டிகளிலிருக்கும் தண்ணீரை வீணாக்கி, சாலைகளை சுத்தம் செய்கிறார்கள். நரேந்திர மோடி காவல்காரரா? அல்லது டெல்லியிலிருந்து வருகைதரும் மாமன்னரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.