டில்லி

ரூ.2000 நோட்டு திரும்பப்பெறப்பட்டு  புதிய ரூ.1000 நோட்டு அறிமுகப்படுத்தப்படுமா என எழுந்த கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின.    புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  அப்போது போதிய அளவு நோட்டுக்கள் அச்சடிக்கப்படாததால் மக்கள் கடும் துயரடைந்தனர்.   ஒரு சிலர் நோட்டுக்களை மாற்ற நின்ற வரிசையில் மரணம் அடைந்தனர்.   தற்போது மீண்டும் ரூ.2000 நோட்டுக்கள் அதிகம் புழக்கத்தில் காணப்படுவதில்லை.

இன்று மக்களவையில் சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர் விஷம்பர் பிரசாத், “ரூ. 2000  நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கறுப்புப்பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆகவே, ரூ. 2000 நோட்டை விரைவில் திரும்பப்பெற்று மீண்டும்  ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுகிறது. அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர், “மக்கள் இடையே பணமதிப்பிழப்பு குறித்து இன்னும் அச்சம் இருக்கிறது.   ஆனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. மத்திய அரசிடம் ரூ.2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. அத்துடன்,புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை

பணமதிப்பிழப்பு அறிவிப்பின் நோக்கம் நோக்கம் கறுப்புப்பணத்தை ஒழித்தல், கள்ள நோட்டை ஒழித்தல், தீவிரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுத்தல், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வழிசெலுத்துபவர்களை அதிகப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஊக்கமளித்தலாகும். இந்த அறிவிப்பின் மூலம் நோக்கத்தை முழுமையாக எட்டியிருக்கிறோம்.

சென்ற 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி 17,74,100 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019, டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி 22,35,600 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் நாட்டில் புழக்கத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள புள்ளிவிவரத்தின் படி 2016-17-ம் ஆண்டில் 7,62,072 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2017-18-ம் ஆண்டில் 5,22,783 கள்ள நோட்டுகளும், 2018-19ம் ஆண்டில் 3,17,389 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக  டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்துள்ளது.  2017-18-ம் ஆண்டில் பரிமாற்ற அளவு 2,071 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிமாற்றம், 2018-19-ம் ஆண்டில் 3,134 கோடியாக அதிகரித்துள்ளது” எனப் பதிலளித்தார்.