சென்னை:

ராஜராஜ சோழன் மீதான குற்றச்சாட்டுக்கு சரித்திர சான்றுகள் எதுவும் உள்ளதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜராஜசோழன் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியது தமிழகத் தில் அரசியல் சர்ச்சைகளை கிளப்பி உள்ள நிலையில் அவர்மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில்,நாம் தமிழர் கட்சி தலைவர் பா.ரஞ்சித்தின் பாளையங்கோட்டை பேச்சு குறித்து கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இன்று பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,.  பல்வேறு நாடுகளை வென்று வல்லரசை நிறுவிய மன்னர் ராஜராஜ சோழன். அவர்,  சொந்த நாட்டு குடிகளின் நிலத்தை எடுத்துக்கொண்டார் என்பதற்கு என்ன சான்று உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இயக்குநர் ரஞ்சித் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்று சீறிய சீமான், , ”வரலாற்றில் இருந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.

ரஞ்சித், தனது பார்வையில் ராஜராஜ சோழனின் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கிறார். நாங்கள் அதைத் தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிக்க காலமாக அதைப் பார்க்கிறோம் என்று கூறியவர், ராஜராஜ சோழன் மீது எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் அருள்மொழிச் சோழன் என்கிற ராஜராஜ சோழன், அரசர்க்கரசன் எங்களுடைய பெருமைக்குரிய பாட்டன்தான்.

ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு, மணியரசன் ஆதாரப்பூர்வமாகப் பதிவுகளை எடுத்து வைக்கிறார். ஆனால் எங்களின் கேள்வி, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல் இயக்குநர் ரஞ்சித், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதுதான்” என்றார் சீமான்.