சென்னை,
ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரும் மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு,  திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் முடிந்தும் குற்றவாளிகள் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பஷீர்அகமது முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் சார்பில் 12வது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ராமஜெயம் கொலை தொடர்பாக 300 காரணங்கள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும்,  குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

போலீசாரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.