டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் முக்கியமாக கருதப்படுவது ஐஎஸ் இயக்கமாகும். இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதன் அடிப்படையில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இந்தியாவில் இந்த இயக்கம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான மையத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ரசல் டிராவர்ஸ் இது குறித்து கூறியிருக்கிறார். இந்திய, அமெரிக்க வம்சாவளி செனட் உறுப்பினரான மேகி ஹசன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஐஎஸ் இயக்கத்தில் பல்வேறு கிளைகள் இருந்தாலும், ஐஎஸ்ஐஎஸ் கே என்ற அமைப்பு தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக இருக்கும் அமைப்பாகும்.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் இந்தியாவில் கடந்தாண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது. ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை மாறாக, தோல்வியில் முடிந்தது.

முன்னதாக, ஐஎஸ் அமைப்பில் கிட்டத்தட்ட 20 கிளைகள் இயங்கி வருகின்றன. முழுக்க, முழுக்க நவீன தொழில்நுட்பத்தை அவர்கள் கையாளுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால், நியூயார்க்கில் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

எப்பிஐயின் நடவடிக்கையால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. அதன்பிறகு, 2017ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக நிச்சயமாக, ஆப்கானிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகளில் தங்கள் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவர். குறிப்பாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஹக்கானி தீவிரவாத இயக்கத்துடன் நீண்ட கால தொடர்பில் இருக்கும் அமைப்பு அல் கொய்தா என்று கூறியிருக்கிறார்.