ஜெருசலேம்

கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ளது.  இதனால் பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. ஆனால் இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இதுவரை 8430க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 49 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.  இந்நாட்டில் பழமை வாதிகள் மிக அதிக அளவில் உள்ளனர்.  அவர்களில் ஒருவரான யாகோவ் லிட்ஸ்மேன் என்பவர் நாட்டின் சுகாதார அமைசரகா உள்ளார்.

ஒரு மதவாதி கொரோனா வைரஸ் ஓரின சேர்க்கையாளர்களால் பரவுகிறது எனத் தெரிவித்தார்.  அதையொட்டி இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மேன் ஓரின சேர்க்கையாளர்களுக்குக் கடவுள் அளித்த தண்டனை கொரோனா வைரஸ் எனத் தெரிவித்தார்.  இது சர்ச்சையை உண்டாக்கியது.

தற்போது லிட்ஸ்மேன் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்த இஸ்ரேல் தேசிய பாதுகாப்புக்குழு உத்தரவிட்டுள்ளது.