டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக உள்ள சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவன்.  சென்னை எம்ஐடியில் 1980 ஆம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும், மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றவர் சிவன்.

இவர் 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார்.  அதைத்தொடர்ந்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து வந்தார். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு,  கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்ரோவின்  தலைவராக நியமிக்கப்பட்டார்.

அறிவியல் சேவைக்காக இவருக்கு 2014 ஆம் ஆண்டுசென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது, இதேபோல் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வென்றவர் சிவன்.

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அவருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சிவன் பிள்ளையின் பதவிக்காலம் ,  2022 ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.