புதுடெல்லி: கொரோனா பாதிப்புக்கான பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ.5 கோடி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்குவதற்காக மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது.

இதில் திரட்டப்படும் தொகையானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ சார்பில் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக மொத்தம் ரூ.5 கோடியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருந்து உபகரணங்கள் வாங்குவதற்கும் வழங்கப்பட உள்ளதாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.