ஸ்ரீஹரிகோட்டோ:

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ்தவான்  விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘கலாம் சாட்’ ,  ‘மைக்ரோசாட்-ஆர்’,  ஆகிய  செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவ;பபட்டது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு  7.37 மணிக்கு கவுன்டவுன் தொடங்கிய நிலையில், நேற்று நள்ளிரவு 11.37 மணியளவில்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான்  விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்  வெற்றிகரமாக ஏவப்பட்டது.

நாட்டின் எல்லை பகுதியை கண்காணிக்க உதவும் மைக்ரோசாட் ஆர்  செயற்கைக்கோள் மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட்டிலைட் ஆகியவை ,வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

மொத்தம் 690 கிலோ எடை உடைய மைக்ரோசாட் – ஆர் செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, புவியை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இது, புவி அமைப்பு, நாட்டின் எல்லை பகுதிகளை ஆய்வு செய்ய, ராணுவத்துக்கு பயன்படும்.

இந்த ராக்கெட்டில் நான்கு நிலைகள் இருக்கும். அதில், இறுதி நிலையில், செயற்கைக்கோள் இருக்கும். செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய பின், ராக்கெட்டின், நான்காவது நிலை, அங்கேயே சுற்றி வரும். இதன் ஆயுட்காலம், சராசரியாக, 7 மாதங்கள். இப்போது, இஸ்ரோ முதல் முறையாக, ராக்கெட்டின் நான்காவது நிலையில் உள்ள பாகத்தில், மாணவர்கள் உருவாக்கிய, ‘கலாம்சாட்’ செயற்கைக்கோளை பொருத்தியுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், துவக்க நிலை உந்துதலுக்காக இரண்டு பூஸ்டர் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் செலவு குறையும். சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்’ என்ற புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. ‘சந்திரயான் – 2’ விண்கலம், ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இஸ்ரோ இதுவரை 45 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில் முதன்முறையாக செயற்கைகோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் இந்த ராக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.