உருமாற்றம் செய்யப்பட்ட பிரதமரின் புகைப்படம்

டில்லி

பொய் செய்தி குறித்த அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் உத்தரவை பிரதமர் ரத்து செய்த பிறகும் பிரதமரின் உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை உண்டாகி உள்ளது.

நேற்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பொய் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களின் உரிமம் பறிக்கப்படும் என அறிவித்தார்.   அதற்கு எதிர்க்கட்சிகளும் பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தை ஒட்டி பிரதமர் அந்த உத்தரவை ரத்து செய்தார்.     ஆயினும் அந்தப் பொய்ச் செய்தி சர்ச்சை இன்னும் தொடர்ந்தவாறு உள்ளது.

கடந்த 2015 ஆம் வருடம் சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.    அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டதாக  7 புகைப்படங்கள் வெளியாகின.   அதில் ஒன்று உருமாற்றம் (morphing) செய்யப்பட்ட புகைப்படம் என சுட்டிக்காட்டப் பட்டது    அதற்கு அந்த புகைப்படத்தை வெளியிட்ட தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தவறாக வெளியிடப்பட்டதாகவும் மேலும் இது போல புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான  ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அது குறித்து பத்திரிகையாளர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.  மேலும் அரசின் தகவல் மற்றும் ஓளிபரப்புத் துறையே பொய்ச் செய்தி வெளியிட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர்.